தீபாவளி முன்பதிவு தொடங்கியது : வெளியூர்களுக்கு 700 சிறப்பு பஸ்கள்
சென்னை:தீபாவளிக்கு வெளியூர் செல்ல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 700க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 3ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். தீபாவளிக்கு செல்ல ரயில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுதீர்ந்து விட்டன. இதையடுத்து, பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களை நம்பியுள்ளனர்.
இந்த ஆண்டு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 700 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதில் விரைவு போக்குவரத்து கழகம் 200 சிறப்பு பஸ்களையும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 350 சிறப்பு பஸ்களையும் இயக்கவுள்ளன. 300 கி.மீ மேல் விரைவு போக்குவரத்து கழகம் மட்டுமே இயக்க வேண்டுமென்பதால், மற்ற போக்குவரத்து கழகங்களின் 150 சிறப்பு பஸ்களையும் ஒருங்கிணைத்து விரைவு போக்குவரத்து கழகம் இயக்கும் என்று கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்ல 60 நாட்களுக்கு முன்பே விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதன்படி, தீபாவளிக்கு செல்ல இன்று முதல் முன்பதிவு துவங்கியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பஸ்களில் 300 கிலோ மீட்டருக்கு மேல் விரைவு போக்குவரத்து கழகம்தான் இயக்க வேண்டுமென கடந்த ஆண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவு போக்குவரத்திற்கு கூடுதலாக புதிய பஸ்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே தீபாவளிக்குள் விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் மொத்த எண்ணிக்கை 1,761 ஆக அதிகரிக்கும்.
கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கான முன்பதிவு டிக்கெட்களை இன்று முதல் http://www.tnstc.in/ என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்காக இந்த ஆண்டில் 700க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், பிராட்வே, தாம்பரம் உட்பட 20 இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் முன்பதிவு செய்யலாம். மக்களின் வசதிக்காக முன்பதிவு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments