அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் போட்டிகளில்
சானியா, பூபதி, போபண்ணா தோல்வி
நியூயார்க், ஆக. 31:-
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும், சானியா மிர்சா, மகேஷ் பூபதி மற்றும் போபண்ணா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தேல்வியடைந்து வெளியேறினர்.
பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற இளம் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில், 20-ம் தரநிலை வீரரான ஆண்ட்ரீஸ் செப்பி(இத்தாலி) என்பவருடன் மோதினார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போட்டியில் கடுமையாகப் போராடிய சோம்தேவ், 6-7 (8), 4-6, 5-7 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா தோல்வியடைந்ததன் மூலம் இந்தியாவின சவால் முடிவுக்கு வந்தது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் சானியா-ஹாரியா டீகாவ் ஜோடி, லிசேல் ஹூபர்-மார்சலோ மெலோ ஜோடியிடம் 6-4, 6-7, 4-10 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
3-ம் தரநிலை ஜோடியான போபண்ணா-ஜூலியா ஜார்ஜஸ், சான்டியாகோ கான்சலஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியிடம் 7-6, 2-6, 6-10 என்ற செட்கணக்கில் தோல்வியைடைந்தது. மகேஷ் பூபதி-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, 6-7, 6-7 என்ற நேர் செட்களில் ஸ்வீடன் ராபர்ட் லிண்ட்ஸ்டட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். லியாண்டர் பயஸ் ஏற்கனவே ஆடவர் இரட்டையர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
0 comments