முதுகுளத்தூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கணவன்-மனைவி கைது
முதுகுளத்தூர், ஆக. 22:-
முதுகுளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் முதுகுளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ராமபாண்டி, காத்தலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் முதுகுளத்தூர் முகமதியர் வடக்கு தெருவில் வசித்து சரினா பானு என்பவரது வீட்டில் நகை திருடு போன சம்பவத்தில் அங்கு கிடைத்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் பூலாங்கல்லை சேர்ந்த அபுபக்கர் மகன் சேக் அப்துல்லா(வயது 34) என் பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது 2வது மனைவி ஆமீனா பானு என்ற ஆமினா பீவி என்பவருக்கும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமதியர் தெருவில் வசிக்கும் சரினா பானு ஆகியோரது வீட்டிலும், காக்கூர் வாரணாசி அம்மன் கோவிலிலும், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலம்மாள் என்பவரது வீட்டிலும், கமுதி ராமமூர்த்தி என்பவரது வீட்டிலும் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் ரூ.8½ லட்சம் மதிப்புள்ள 57 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பாராட்டினார்.
0 comments