நடிகை அஞ்சலியை
9-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு
நீதிபதிகள் உத்தரவு
நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். இதையடுத்து அஞ்சலியை மர்ம நபர்கள் கடத்தி சென்று தங்கள் பிடியில் வைத்து தனக்கு எதிராக பேச வைத்தாக பாரதிதேவி போலீசில் புகார் செய்தார்.
சென்னை ஐகோர்ட்டிலும் அஞ்சலியை கண்டு பிடித்து ஆஜர்படுத்தும்படி ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்தார். அதில் அஞ்சலி ஏப்ரல் 8-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அஞ்சலியை சமூக விரோதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அஞ்சலியை தேடி பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீது இரு மாதங்களாக விசாரணை நடந்தது. தற்போது மீண்டும் நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தம்பித்துரை நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறி இருக்கிறார்.
எனவே கோர்ட்டில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றார். ஆனால் சித்தி பாரதிதேவி சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயபிரகாஷ் “ஏப்ரல் 8-ந்தேதி காணாமல் போன அஞ்சலி என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஏற்கனவே பல படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். யாரோ மர்ம நபர்கள் பிடியில் அவர் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் வருகிற 9-ந்தேதி அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
0 comments