வெற்றிகரமாக கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கியது
மின் உற்பத்தி ஒரே மாதத்தில் 400 மெகாவாட்டாக உயரும்
கூடங்குளம்:
கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை யில் நேற்று நள்ளிரவு முதல் மின்உற்பத்தி தொடங்கியது. அப்போது அணு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு உற்சாகம் அடைந்தனர். ஒரு மாதத்தில் 400 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்டும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் புரோகித் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா & ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அணு உலையில் அணு பிளவுக்கும், மின்சார
உற்பத்தியை தொடங்கவும், கடந்த 11ஆம் தேதி அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம்
அனுமதி அளித்தது.
இதையடுத்து, இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அணுசக்தி கழக தலைவர் கே.சி. புரோகித் ஆகியோர் நேற்று கூடங்குளம் வந்து, அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்பின்னர்,
ஆர்.கே. சின்ஹா நிருபர்களிடம் கூறுகையில், ‘ பாதுகாப்பு
அம்சங்களை நிறைவேற்றியபின், அணுசக்தி ஒழுங்கு முறை வாரியமும், இந்திய
அணுசக்தி கழகமும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க
கடந்த 11ஆம் தேதி அனுமதி அளித்தன. இதை தொடர்ந்து, அன்று நள்ளிரவே முதல் அணு
உலையை இயங்கச் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன என்றார்.
இந்திய அணுசக்தி கழக தலைவர் புரோகித் கூறுகையில், ‘கூடங்குளம்
அணு உலையில் 30 முதல் 45 நாட்களில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படும். அப்போது, கூடங்குளம் மின்சாரம், மத்திய மின் தொகுப்பில்
இணைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்படும். அதன்பின், மின் உற்பத்தியில்
75 சதவீதம், 90 சதவீதம் என்ற நிலைகள் எட்டப்பட்டு, இறுதியாக முழுமையான
ஆயிரம் மெகாவாட் உற்பத்தி என்ற நிலை எட்டப்படும். கூடங்குளம் 2வது அணு
உலையை பொறுத்தவரை, மாதிரி எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.
இன்னும் 8 மாதங்களில், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்’
என்றார்.
நள்ளிரவு 12 மணி முதல் அணு உலை வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.
மின்சாரமும்
உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது, அங்கே கூடியிருந்த அணுசக்தி கழக
அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கட்டித்
தழுவியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
0 comments