சென்னையில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவு -
முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகே ஒருகோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைரவிழா நினைவு வளைவை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, 2012-ஆம் ஆண்டில் 60 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா முன்னிலையில், குடியரசுத் தலைவர் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவினை மக்கள் என்றென்றும் நினைவு கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவினை, சரித்திரப் புகழும், பாரம்பரியமும் வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையின் பொலிவிற்கு ஏற்றவாறு, கம்பீரமான தோற்றத்துடன் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு பொருத்தமாகவும், பாரம்பரியம் மற்றும் நவீன கட்டடக் கலை நுட்பத்திறனை உள்ளடக்கி அமைப்பதற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவு அமைப்பதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் உத்தரவின்படி, இதன் கட்டுமானப் பணி குறுகிய காலத்தில், சிறந்த முறையில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் - 108 அடி அகலம், 54 அடி உயரத்துடன், புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றின் கட்டடக் கலை அமைப்பைப் போன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவினை, திறந்து வைப்பதற்காக, வருகை தந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, நேப்பியர் பாலம் முதல், விழா நடைபெறும் இடம் வரை அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழா நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வருகை தந்தபோது, சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. ப. தனபால், நிதியமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. கே.வி. ராமலிங்கம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறைச் செயலாளர் திரு. சாய்குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா நினைவு வளைவை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா நினைவு வளைவுக்கான கல்வெட்டினையும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றப் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறைச் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 comments