சியர்லீடர்ஸ், இரவு விருந்துக்கு தடை
ஐ.பி.எல் தலைவர் டால்மியா அறிவிப்பு
நியூடெல்லி, ஜூன் 10:
ஐந்து நாள் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட் காலம் சென்று, ஒரு நாள் போட்டிகள் பிரபலம் அடைந்து தற்போது 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளன. பணமழை கொட்டும் ஐ.பி.எல். போட்டியின் தற்போது நடந்த முடிந்த சீசனில் சூதாட்டங்கள்தான் முக்கிய இடத்தைப் பிடித்தன.
இதன் விளைவாக இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவர் ஸ்ரீனிவாசன் பதவியைத் துறக்க நேரிட்டது. இடைக்காலத் தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டின் பெருமையைத் தக்க வைக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க கிரிக்கெட் போர்ட் முடிவு செய்தது.
'ஆபரேஷன் கிளீன் அப்' என்ற பெயரில் இந்த ஆட்டத்தில் உள்ள லஞ்சங்களை ஒழிக்கும்விதமாக சியர் லீடர்களையும், இரவு விருந்துகளையும் தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி அவர்களை ஆதரிக்கும் ஊழியர்கள் உட்பட அனைவருமே இது போன்ற விருந்துகளில் கலந்து கொள்ள கூடாது என்று கிரிக்கெட் போர்டு முடிவெடுத்துள்ளது. அணியின் உரிமையாளர்கள் (ஸ்பான்சர்ஸ்), ஊழியர்கள், ஆட்ட வீரர்கள் ஆகியோருக்கு கடுமையான ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்துள்ள போர்டு நிர்வாகம் தங்கும் இடங்களிலும் , ஆட்ட ஓய்வறைகளிலும் வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி, மைதானத்தில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காவண்ணம் தடுக்கும் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது என்றும், ஆட்ட வீரர்கள் காதில் பொருத்தும் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாதென்றும் தீர்மானித்துள்ளது. அணியின் உரிமையாளர்கள், ஆட்டங்கள் நடைபெறும்போது வீரர்கள் தங்கும் இடங்களுக்கோ, ஓய்வறைகளுக்கோ செல்லக்கூடாது.
மேலும் அனைவரின் தொலைபேசி எண்களும் முன்கூட்டியே நிர்வாகத்திடம் வேண்டும் என்றும் ,இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறியுள்ளார். ஆட்ட நேரத்தின் இடையே குழுவினருடன் விவாதிப்பதற்காக வழங்கப்படும் சிறு இடைவேளை எப்போதும்போல் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments