குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி
தலைமை செயலகம் வந்த பெற்றோர்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த குழிக்கோடு கிராமத்தை சேர்ந்தவர், டென்னிஸ் குமார்,33; கொத்தனார். இவரது மனைவி மேரிசுஜா; பி.எட்., பட்டதாரி. இவர், 2012 ஜூலை மாதம், பிரசவத்திற்காக, மார்தாண்டத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு, ரத்தப் போக்கு ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. தாமதமாக அறுவை சிகிச்சை செய்து, ஆண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
மூளை வளர்ச்சி பாதிப்பு:
பின் குழந்தையை, ஐ.சி.யு.,வில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை சாதாரணமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறகு குழந்தையை, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஓரிரு நாளில், குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை திருவனந்தபுரத்தில் உள்ள, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், "குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது; கண் பார்வை பறிபோய்விட்டது' என, தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் அதிர்ச்சி:
அதைத் தொடர்ந்து பெற்றோர், "குழந்தையின் பரிதாப நிலைக்கு காரணமான, மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என, கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிம் புகார் அளித்தனர். நடவடிக்கை எதுவும் இல்லாததால், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவில், அதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை படித்து பார்த்த, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின் அவர்களுக்கு, ஆறுதல் கூறி அனுப்பினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
0 comments