மகள் கனிமொழிக்காக கருணாநிதி தே.மு.தி.கவிடம் கெஞ்சல்
முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல்
ராஜ்யசபா தேர்தலில், கனிமொழியை வேட்பாளராக நிறுத்துவது என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டதில் முடிவு செய்யப்பட்டது. அவர் போட்டியின்றி தேர்வாக, தே.மு.தி.க., மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கேட்க, தி.மு.க., சார்பில் தூதர்களை அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என, தி.மு.க, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா தேர்தல், இம்மாதம், 27ம்தேதி நடைபெறவுள்ளது. சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் உட்பட, 22 எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க.,- எம்.எல்.ஏ., க்கள் சிலர் பேசியது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மீண்டும் ராஜ்யசபா எம்.பி., யாக கனிமொழியை தேர்வு செய்து டில்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மோடிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிராக, தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க., வுக்கு எதிராக, தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால், இரு எம்.பி., "சீட்'களை இந்த அணி கைப்பற்ற முடியும்.
தி.மு.க., வில் உள்ள, 23 எம்.எல்.ஏ.,க்கள், தே.மு.தி.க., வில் உள்ள, 22 எம்.எல்.ஏ.,க்கள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் உள்ள, 18 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் கட்சியில் உள்ள, ஐந்து எம்.எல்.ஏ.,க்களையும் சேர்த்து கணக்கிட்டால், 68 எம்.எல்.ஏ., க்கள் உள்ளனர். ஒரு எம்.பி., பதவிக்கு, 34 எம்.எல்.ஏ., க்கள் தேவை என்ற அடிப்படையில், 68 எம்.எல்.ஏ., க்கள் உள்ள நிலையில், இரு எம்.பி.,க்களை பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கிண்டல்:
அப்போது, கருணாநிதி குறுக்கிட்டு, "இரு எம்.பி., "சீட்'களை பெறுவது சுலபம் அல்ல. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், மற்ற கட்சிகளை சேர்ந்த, எம்.எல்.ஏ., க்கள், முதல்வரை எப்போது சந்திப்பர் என்பது தெரியாது.
எனவே, இரு, "சீட்'களை பெறுவதற்கான ஓட்டுக்கள் கிடைக்கும் என, நம்ப முடியாது. ஒரு, "சீட்'டை பெறுவது குறித்து தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு திரட்டுவதற்கு, தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., க்கள் கொண்ட தூதுவர்களை அனுப்பி வைக்க, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி பேட்டி:
கூட்டம் முடிந்த பின், நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ராஜ்யசபா தேர்தல், தி.மு.க., தேர்தல் நிதியைப் பற்றி நாங்கள் இந்தக் கூட்டத்தில் பேசினோம். ராஜ்யசபா தேர்தலை பற்றி எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் கலந்து பேசி உரிய முடிவெடுப்போம். குறிப்பிட்ட எந்த கட்சியிடமும் நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. பொதுவாக எல்லாக் கட்சிகளிடத்திலும் பேசுவோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
விஜயகாந்த் குழப்பம்:
வேட்புமனு தாக்கல் முடிவதற்கு நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இதில் போட்டியிடுவதா, புறக்கணிப்பதா, தி.மு.க., வேட்பாளரை ஆதரிப்பதா என்ற முடிவை எடுக்க முடியாமல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. "ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க கூடாது. அவர்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க., நிர்வாகிகள், விஜயகாந்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
கனிமொழி மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் உள்ளதை, இதற்கு காரணமாக அவர்கள் முன்வைக்கின்றனர். கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தால், கட்சியின் ஊழல், வறுமை ஒழிப்பு கொள்கைகள் கேலிக் கூத்தாகி விடும் எனவும், அவர்கள் கூறி வருகின்றனர். இதனால், தேர்தலை புறக்கணிக்கலாமா என்ற எண்ணம், விஜய
காந்திற்கு எழுந்துள்ளது. தி.மு.க.,வை ஆதரித்தால், அது தே.மு.தி.க.,வின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும், விஜயகாந்திற்கு உள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடுவதா, புறக்கணிப்பதா என்ற முடிவை எடுக்க முடியாமல், விஜயகாந்த் திணறி வருகிறார்.
0 comments