திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமில் நடந்த கொடூரம்
இளம் பெண்ணை 9
மாதமாக வீட்டில் அடைத்து வைத்து
பாலியல் கொடுமை :
க்யூ பிரிவு ஏட்டு மீது பரபரப்பு புகார்
பாலியல் கொடுமை :
க்யூ பிரிவு ஏட்டு மீது பரபரப்பு புகார்
திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம் பெண்ணை 9 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக க்யூ பிரிவு ஏட்டு மீது தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுளளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 530 வீடுகளில் 1,470 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம் என்பதால் இதன் கண்காணிப்பை க்யூ பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பணியில் ஏட்டு பிரபு (எ) பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். இந்த முகாமில் விஜயகுமார் மற்றும் அவரது மகள் ராதிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இந்த விஜயகுமார் தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என் மனைவி இறந்ததையடுத்து வயதுக்கு வந்த மகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் சிரமமாக இருந்ததால் இலங்கையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு என் மகள் ராதிகாவை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.
இதுதொடர்பாக க்யூ பிரிவு போலீசாரின் அனுமதி பெற்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராதிகாவை சென்னை வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தேன். உறவினர்களுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற ராதிகாவின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் அவளை இலங்கை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டனர்.
அதுபற்றி என் மகள் போன் மூலம் எனக்கு தகவல் தெரிவித்தார். இதனால் செய்வது அறியாமல் தவித்த நான் உதவிக்காக க்யூ பிரிவு ஏட்டு பிரபாகரனை அழைத்தேன். என்னுடன் சென்னைக்கு வந்து மகளை அழைத்துவர உதவி செய்யுமாறு அவரிடம் உதவி கோரினேன். அவரும் என்னுடன் சென்னைக்கு வந்தார்.
அங்கு விமான நிலையத்தில் இருந்து என் மகளை அழைத்துக்கொண்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்தோம். அங்கு வந்த பிறகு திடீரென ஏட்டு பிரபாகரனின் நடவடிக்கை மாறத் தொடங்கின. பஸ்சில் ஏறி அமர்ந்தவுடன் என்னை வேறு இருக்கையில் அமர சொல்லிவிட்டு என் மகளிடம் சில விவரங்கள் கேட்க வேண்டும் என கூறி அவளது அருகில் அமர்ந்துகொண்டார்.
பஸ் திருச்சியை நெருங்கியபோது, நான் என் மகளை பார்க்க எழுந்து சென்றேன். அப்போது ஏட்டு பிரபாகரன் என் மகள் ராதிகாவின் மடியில் படுத்து இருந்தார். இதைப்பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் முகாமிற்கு வந்தவுடன் அங்குள்ள சிவஈஸ்வரி என்பவரின் வீட்டிற்கு ராதிகாவை அனுப்பி வைத்த ஏட்டு பிரபாகரன், இனி அந்த பக்கமே நீ வரக்கூடாது என என்னை எச்சரித்தார்.
மீறி ஒருமுறை மகளை பார்க்க சென்ற என்னை ஏட்டு பிரபாகரன் கன்னத்தில் அறைந்தார். இப்படியாக 9 மாதங்களாக என் மகளை சிவஈஸ்வரி வீட்டில் வைத்து ஏட்டு பிரபாகரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே, என் மகள் ராதிகாவை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏட்டு பிரபாகரன் மீது கூறப்பட்டதால் க்யூ பிரிவில் இருந்து, அவர் ஏற்கனவே பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் தொடர்ந்து க்யூ பிரிவிலேயே பணிபுரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் திருச்சி போலீசாரிடையே பரபரப்பு நிலவுகிறது.
0 comments