இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில்
கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆய்வு
இராமநாதபுரம் :
கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பான ஆய்வுப்பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாற்று யோசனை
நாட்டில் தற்போது நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தியை விட தேவையின் அளவு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க மாற்று மின்சக்தி உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றிய சிந்தனை அனைவரிடமும் எழுந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.
கடல் அலையில் இருந்து மின்சாரம்
தமிழகத்தில் புதிய அனல் மின்சாரம், காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய திட்டமாக கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எண்ணம் உருவாகி உள்ளது. அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரித்து அதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆராய்ச்சியாளர்கள் கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமடம், தொண்டி, பாம்பன், வாலிநோக்கம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கடல் அலை மின்சார உற்பத்தி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் நிதிக்குழு அனுமதி அளித்துள்ளது.
0 comments