திருப்புல்லாணி அருகே பெட்ரோல் டேங்கர்–மணல் லாரி மோதல்
3 பேர் காயம்
இராமநாதபுரம், டிச. 1:
இராமநாதபுரம் அழகன் குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு திருநெல்வேலியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திருநெல்வேலி தச்சநல்லூர் ஊடுடையாபுரத்தைச் சேர்ந்த டிரைவர் குணா (வயது27) ஓட்டி வந்தார். தேவர்குளத்தைச் சேர்ந்த முருகன் கிளீனராக செயல் பட்டார்.
இந்த லாரி, திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த மணல் லாரியோடு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு லாரிகளின் முன் பகுதிகளும் பலத்த சேதமடைந்ததால் அதன் டிரைவர்கள் மற்றும் கிளீனர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் கணேசன், திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் ராஜா தேசிங்கு ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட டிரைவர் குணா, கிளீனர் முருகன், மணல் லாரி டிரைவர் முத்துக் குமார் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணல் லாரி டிரைவர் முத்துக்குமார், கன்னியாகுமரி மாவட்டம் இராமநாதபுரத்தை சேர்ந்தவர். தஞ்சாவூரில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகர்கோவில் சென்றபோது தான் விபத்தில் சிக்கி உள்ளார். இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 comments