அமெரிக்க ஏவுகணை தாக்குதலில்
தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் பலி
பாகிஸ்தான் கண்டனம்
பெஷாவர், நவ. 3:
பாகிஸ்தானில் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலை பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை அமெரிக்காவின் உளவுத்துறை ஆளில்லா விமானங்களின் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றது.
இந்த நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் டேன்டி தர்பா ஹெல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் ஒன்று அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.
அதில், அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இச்சம்பவத்தில் அங்கு பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகள் பலியாகினர். மற்றொரு ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் கொல்லப்பட்டார்.
டேன்டி தர்பா ஹெல்லில் உள்ள ஒரு மசூதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் ஒரு வாகனத்தில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏவுகணை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறையும், பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
ஆனால், தலிபான் தலைவர் மசூத் கொல்லப் பட்டதற்கு பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி நசீர் அலிகான் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் நடத்தி வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் சமரச பேச்சு நடத்த பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் கொல்லப்பட்டது பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அரசின் மீது தீவிர வாதிகளின் பழிவாங்கும் போக்கையும் அதிகரித்து விட்டது என தெரிவித்துள்ளார். கடந்த 2009–ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்போதைய தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்.
அவருக்கு பிறகு ஹக்கி முல்லா மசூத் தலைவராக இருந்து வந்தார். இவர் அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார். இவரது தலைக்கு அமெரிக்கா ரூ.5 கோடி பரிசு தொகை அறிவித்து இருந்தது.
0 comments