1 November 2013

ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு கட்டண பட்டியல் ஒட்ட வேண்டும்

ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு 
கட்டண பட்டியல் ஒட்ட வேண்டும்


சென்னை : 

                 ஆம்னி பஸ்களின் கட்டணத்தை ஒட்டி வைக்க வேண்டும்; அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தனி தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்.  புகார்களை கையாள தனி உதவி மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஆர்.கோபிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 

தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பொதுமக் களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது; மன உளைச்சலை தருகிறது.   2011 நவம்பர் 17ம் தேதி தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி அரசு இந்த  கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதை மீறும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தும் ஆம்னி பஸ்கள் இதை பின்பற்றுவதே இல்லை.

அரசு உத்தரவை பின்பற்றாத  ஆம்னி பஸ்கள் மீது  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அரசு உத்தரவை மீறும் ஆம்னி பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்யவேண்டும்.  அதிகாரிகள் ஆம்னி பஸ்களை கண்காணிப்பது இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது எடுப்பது இல்லை. ஆம்னி பஸ்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசு போக்குவரத்து நிலையங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும். புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும்.

புகார்களை கையாள தனி உதவி  மையங்களை அமைக்க வேண்டும். டெலிபோன் எண்களை பத்திரிக்கை, டிவிக்களில் விளம்பரப்படுத்த வேண்டும். இதுதவிர புகார் தெரிவிக்க உள்ள தொலைபேசி எண்களை பஸ்களில் குறிப்பிட வேண்டும் என்று கோரி அரசுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆம்னி பஸ்களை கண்காணிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் சத்தியசந்திரன் ஆஜராகி, ஆம்னி பஸ்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், ஆம்னி பஸ்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று  போக்குவரத்து நிலையங்களில் விளம்பர பலகை வைத்து ஒட்ட வேண்டும். புகார் தெரிவிக்க உதவி மையம் அமைக்க வேண்டும். புகார் தெரிவிக்க  தொலைபேசி எண்களையும் விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top