இன்று மதியம் 2 மணிக்கு மெட்ரோ ரயில் வெள்ளோட்டம்:
முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
சென்னை :
கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் 2 மணிக்கு கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை மேம்பாலத்தில் 2014ம் ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஓடக்கூடிய மெட்ரோ ரயில்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 42 மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வர உள்ளன.
பிரேசில் நாட்டில் இருந்து வந்துள்ள 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் தொடரின் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக கோயம்பேடு பணிமனையில் 800 மீட்டர் தண்டவாளம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. முதல் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
எக்ஸ்ட்ரா தகவல்
நான்கு பெட்டிகளை கொண்ட ஒரு மெட்ரோ ரயில் தொடரில், மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற விகிதத்தில் கணக்கிட்டால் ஒரு மணிக்கு, அலுவலக நெரிசல் நேரத்தில் சுமார் 24,968 பேர் பயணம் செய்வார்கள்.
0 comments