தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவிப்பதை போல் சித்தரிக்கும் 'வார்' திரைப்படம் பாகிஸ்தானில் வசூலை குவிக்கிறது
இஸ்லாமாபாத், அக்.21:
பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத வெறியாட்டங்களின் பின்பலமாக இந்தியா உள்ளது போல் சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட 'வார்' என்ற திரைப்படம் பாகிஸ்தானில் தயாராகி, திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பதிலும், கதைக்கு வடிவம் தந்ததிலும் பாகிஸ்தான் ராணுவம் பக்கபலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிலால் லஷாரி என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பாகிஸ்தானில் உள்ள 42 தியேட்டர்களில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இந்த படம் கடந்த வெள்ளிக் கிழமை இரவு காட்சி வரை மட்டும் 42 1/2 கோடி ரூபாயை குவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் பக்ரீத் அன்று வெறும் 90 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் வார் திரைப்படம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாரி குவித்துள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான்களை கூட இந்திய உளவுத்துறையான 'ரா' தான் வழிநடத்தி வருகிறது என்பது போன்ற காட்சியமைப்புகள் 'வார்' படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள போலீஸ் குடியிருப்பு ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, இந்தியாவை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் ஆனந்த நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இப்படத்தில் வருவதாக பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்தனர்.
0 comments