அரசு கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது
சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மாணவ, மாணவிகளின் உடை விஷயத்தில் தேவையில்லாமல் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடை என்பது மாணவர்களுக்கான சுதந்திரம். அதில் தலையிடக்கூடாது என்று சில மாணவிகள் தெரிவித்தனர். எனினும் பல மாணவ, மாணவிகள் சீரான உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
0 comments