ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராகமல் விலக்கு அளிக்கக் கோரிய
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின்
மனுவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டம்!
டெல்லி:
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனு விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைவு என்றும் அவரால் எதையும் உணரக் கூட முடியாது என்றெல்லாம் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில், சிபிஐ நீதிமன்ற விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தயாளு அம்மாள் தாக்கல் செய்திருக்கும் மனுவானது வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது. அவர் டெல்லி வந்தால் அவரது உடநிலை பற்றி முடிவு செய்யலாம்.
இந்த வழக்கின் மீது நாளை விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டது. முன்னதாக இன்றைய விசாரணையின் போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இதுபோன்ற வழக்குகளை உச்சநீதிமன்றமும் சிபிஐ நீதிமன்றமுமே விசாரிக்க முடியும் என்று வாதிட்டார்.
0 comments