இராமநாதபுரத்தில் வியாபாரி வீட்டில்
70 பவுன் நகை – 3 கிலோ வெள்ளி கொள்ளை
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதி மோர்கடை தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது55). இவர் புதிய பஸ் நிலையம் அருகே மூங்கில் கடை வைத்துள்ளார். இவரது மகன் கார்த்திக் (26). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் நீலா(24).
நேற்று காலையில் நீலா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு 10 மணி அளவில் மூங்கில் கடையை பூட்டிவிட்டு சிதம்பரமும், கார்த்திக்கும் திருவாடானை அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.
இதை அறிந்த ‘மர்ம’ மனிதர்கள் நள்ளிரவு சிதம்பரத்தின் வீட்டு முன்பக்க கிரீல் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகளையும், 3 கிலோ வெள்ளி பொருட்களையும் ஒரு சாக்கு மூட்டையில் கட்டினர்.
பின்னர் அவர்கள் கைரேகைகள் தெரியாமல் இருக்க வீடு முழுவதும் தண்ணீரை ஊற்றிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இன்று காலை சிதம்பரம், கார்த்திக் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். கிரீல் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து கேணிக்கரை போலீசில் கார்த்திக் புகார் செய்தார். உடனே டி.எஸ்.பி. முரளிதரன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
0 comments