ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்-அங்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை: பி.சி.சி.ஐ. நடவடிக்கை
மும்பை, செப். 13:
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் மூவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கையை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர்களான அருண் ஜெட்லி, நிரஞ்சன்ஷா ஆகியோர் கொண்ட இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா மற்றும் அமித் சிங் ஆகியோர் உள்ளிட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மற்றும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, 4 வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.
0 comments