வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய 'ஏ' அணி வெற்றி
பெங்களூர், செப்.16:-
கீரன் பவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், ஒரு 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இந்தியா 'ஏ'-வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
முந்தைய நாளில் பெய்த மழையால் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 1 மணி 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி டாஸ் ஜெயித்து, இந்திய 'ஏ' அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, உன்முக்த் சந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். உன்முக்த் சந்த் 10 பந்துகளில் ஒரு ரன்னுடனும், ராபின் உத்தப்பா 37 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 23 ரன்னுடனும் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து கேப்டன் யுவராஜ்சிங், மன்தீப்சிங்குடன் இணைந்தார். ஜனவரி மாதத்துக்கு பின்னர் முதல் முதல் முறையாக களம் காணும் யுவராஜ்சிங் முதலில் அடித்து ஆட சற்று தடுமாறினார். யுவராஜ்சிங் 39-வது பந்தில் தான் முதல் பவுண்டரியை விரட்டினார். அதன் பின்னர் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 61 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதற்கிடையில் மன்தீப்சிங் 78 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து யூசுப்பதான் களம் கண்டார்.
அரை சதத்துக்கு பின்னர் அடுத்த 16 பந்துகளில் அதிரடி காட்டி யுவராஜ்சிங் சதத்தை தொட்டார். இது லிஸ்ட் ஏ போட்டியில் அவர் அடித்த 18-வது சதமாகும். யுவராஜ்சிங் 35-வது ஓவரில் நிகிதா மில்லர் பந்து வீச்சில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்னும், 38-வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்னும் சேர்த்தார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க தனக்கு கிடைத்த 2-வது கட்ட வாய்ப்பை அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் சரியாக பயன்படுத்தினார். அவர் யுவராஜ்சிங்குக்கு நிகராக அதிரடியில் வெளுத்து கட்டினார். யூசுப்பதான் 37-வது ஓவரில் ஆஷ்லே நுர்ஸ் பந்து வீச்சில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 29 ரன் சேர்த்தார்.
அணியின் ஸ்கோர் 39.2 ஓவர்களில் 272 எட்டிய போது யுவராஜ்சிங், நிக்ருமாக் பொன்னர் பந்து வீச்சில் ரோன்ஸ்போர்ட் பீடோனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். யுவராஜ் 89 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 123 ரன் குவித்தார். அடுத்து நமன் ஓஜா களம் இறங்கினார்.
கடைசி ஓவரில் பொன்னர் பந்து வீச்சில் யூசுப் பதான் 3 சிக்சர்கள் தூக்கினார். நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய 'ஏ' அணி 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது. யூசுப் பதான் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 70 ரன்னும், நமன் ஓஜா 8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 313 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி, இந்திய 'ஏ' அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 39.1 ஓவர்களில் 235 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய 'ஏ' அணி 77 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணியில் அதிகபட்சமாக டியோநரைன் 57 ரன்னும், ஆஷ்லே நுர்ஸ் 57 ரன்னும் எடுத்தனர். இந்திய 'ஏ' அணி தரப்பில் சுமித் நர்வால், வினய்குமார், ரோகித் ஷர்மா, யூசுப் பதான் தலா 2 விக்கெட்டும், உனட்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்தியா 'ஏ'-வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
0 comments