ஜூன் மாதத்தில்
3-வது முறையாக பெட்ரோல் விலை ரூ.1.82 உயர்வு
சென்னையில் ஒரு லிட்டர் ரூ.71.72
புதுடெல்லி, ஜூன் 28:-
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாதமிருமுறை மாற்றியமைக்க எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததால் கச்சா எண்ணையின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல் விலை இன்று உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விற்பனை வரி அல்லது வாட் வரியைச் சேர்த்து அந்தந்த நகரங்களில் விலை உயர்வு மாறுபடும்.
டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.66.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் ரூ.2.19 அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.58க்கு விற்பனை செய்யப்படும்.
மும்பையில் லிட்டருக்கு ரூ.2.30 உயர்ந்து ரூ.76.90க்கும்,
கொல்கத்தாவில் ரூ.73.79-ல் இருந்து ரூ.76.10க்கும்,
சென்னையில் ரூ.2.32 உயர்ந்து ரூ.71.72க்கும் விற்பனை செய்யப்படும்.
இதன்மூலம் இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
1-ம் தேதி 75 பைசாவும்,
16-ம் தேதி 2 ரூபாயும் உயர்ந்தது.
30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்றே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை அடுத்த வாரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments