சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 17:
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதேபோல் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை செய்த அதிகாரிகள், சொகுசு கார்கள் மற்றும் அது சம்பந்தமான ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆனால், மு.க.ஸ்டாலின் வாங்கிய ஹம்மர் கார் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறிய சில நாட்களில் இந்த சோதனை நடந்தது. எனவே, இதில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கடந்த 2007-ம் ஆண்டு இறக்குமதி செய்த ஹம்மர் காரை இன்று சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தார். காரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.
சுங்க விதிகளை மீறி சட்டவிரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்த இந்த மிகப்பெரிய முறைகேடு தொடர்பாக, 18 இடங்களில் சோதனை நடத்தியதில் 17 கார்களை பறிமுதல் செய்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments