மண்டபம் கடற்கரையில் கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை
தீவிரவாதிகள் போல் பதுங்கி இருந்தவர்களை விரட்டிப்பிடித்தனர்
மண்டபம் :
மண்டபம் கடற்கரையில் கடலோர காவல்படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடிப் பிடிக்கும் ஒத்திகை நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.
தீவிரவாதிகள் வேட்டை
இந்திய கடலோர காவல்படையின் 37–வது ஆண்டை முன்னிட்டு நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று தீவிரவாதிகள் போல் வேடமிட்டு பதுங்கி இருப்பவர்களை பிடித்து ஒத்திகை நடத்திக் காண்பித்தனர்.
இதற்காக, மண்டபம் தெற்கு கடற்கரையில் இருந்து கரையிலும் செல்லும் ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்துப்படகில் கடலோர காவல்படையினர் பாம்பன் குந்துகால் பகுதிக்கு வந்தனர். அங்கு கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு கமாண்டோக்கள் துப்பாக்கிகளுடன் சவுக்கு காட்டு பகுதிக்குள் மின்னல் வேகத்தில் புகுந்தனர்.
அங்கு ‘டம்மி’ வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் பதுங்கி இருந்த 2 பேரை துப்பாக்கி முனையில் விரட்டிப்பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது கமாண்டோ படை வீரர் ஒருவர் வானத்தை நோக்கி கைத் துப்பாக்கியால் சுட்டார். அதில் இருந்து பச்சை நிறத்தில் பொறி பறந்து மறைந்தது.
கடலோர காவல் படை தினம்
இதன்பின் கடலோர காவல் படை கமாண்டன்ட் எச்.எச்.மோரே நிருபர்களிடம் கூறியதாவது;–
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 1–ந் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது. கடலோர காவல் படையின் 37–வது ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தீவிரவாதிகளை பிடிப்பது போல் கடலோர காவல்படையினரால் ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் கடலோர காவல்படையினர் 10 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
302 மீனவர்கள் மீட்பு
கடந்த ஆண்டு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 302 தமிழக மீனவர்கள் 45 படகுகளுடன் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதேபோல் 137 இலங்கை மீனவர்கள், 15 படகுகளுடன் கடலோர காவல்படையால் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து வந்த 120 அகதிகளையும் கடலோர காவல்படை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளது.
மேலும் 2 கப்பல்கள் வருகை
இராமேசுவரம் பாக்–ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர காவல்படை இரவு பகலாக 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய 3 ஹோவர்கிராப்ட் கப்பல்களும், 2 இன்டர் செப்டர் கிராப்ட் படகுகளும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக மேலும் 2 ஹோவர்கிராப்ட் கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக மண்டபம் கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.
தொண்டி, கீழக்கரை என இரண்டு இடங்களில் புதிதாக ரேடார் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கவும் கடலோர பாதுகாப்பு தொடர்பு நிலையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். பாக்–ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலோ, கடத்தல் சம்பவங்களோ எதுவும் நடைபெறுவது கிடையாது. இலங்கை கடல்பகுதி மிக அருகில் உள்ளதாலும் ராமேசுவரம் கடல் பகுதி முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாலும் கடலோர காவல் படையின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஹோவர்கிராப்ட் கப்பல் கமாண்டன்ட் கே.ஆர்.சுரேஷ் உடனிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
0 comments